சென்னையும் நானும் : Chennai Book Fair.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது எனக்கு மிக மிக தாமதமாக தான் வந்த பழக்கம். ஒரே இடத்தில் இருக்க வேண்டும், மொபைல் போனில் மூழ்கி கிடந்தது என்று பல்வேறு காரணமாக நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மிக தாமதமாக தான் தொடங்கினேன்.
அதிதீவிரமாக புத்தகம் வாசிக்க தொடங்கியதில் இருந்து எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. பல விடயங்களை பக்குவமாக பகுத்தறிவோடு அணுகுவது என்று எனக்கு நானே மாற்றத்தை உணர்ந்தேன்.
இந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்ததிற்கு முக்கிய காரணம் சென்னை புத்தக திருவிழா என்றால் மிகையாகாது. ஒவ்வொரு வருடம் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு கண்டிப்பாக சென்று விடுவேன். காலை உணவை முடித்து விட்டு சென்றால், இரவு வரைக்கும் அங்கே தான் இருப்பேன்.
ஒவ்வொரு ஸ்டால்க்கு சென்று புத்தகம் வாங்குவது, எழுத்தாளர்களை சந்திப்பது, புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கேற்பது என்று அந்த நாள் செல்வதே எனக்கு தெரியாது.
வார இறுதி நாட்களில் சென்றால், உண்மையான திருவிழா போல தான் இருக்கும். நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இந்த இயந்திர உலகில் இன்னமும் புத்தகம் வாசிக்கும் இவ்வளவு பேர் உள்ளார்களா என்று தோன்றும் அளவிற்கு கூட்டம் இருக்கும்.
ஒரு சிலர் கைகள் நிறைய புத்தகம் வாங்கி செல்வதை பார்க்கலாம். அந்த அளவிற்கு திருவிழா போல இருக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், எல்லா பதிப்பகமும் சலுகை தருவார்கள். அதுனாலே பலர் ஒரு வருடத்திற்கு தேவையான புத்தகம் வாங்கி கொள்வார்கள்.
என்ன தான் புது புது எழுத்தாளர்கள் வந்தாலும், வைரமுத்து, எஸ். ரா, சாரு நிவேதா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கல்கி(பொன்னியின் செல்வன்) போன்றவர்கள் புத்தகங்கள் தான் அதிகமாக விற்பனை ஆகும்.
இப்போது நான் சென்னையில் இல்லை. சென்னையில் புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. போக முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. முக நூலில் பலர் அவர்கள் வாங்கிய புத்தகங்கள் பற்றிய பதிவுகள் காணும் போது பொறாமையாக உள்ளது. இதுவும் கடந்து போகும் என்று மனதில் நினைத்து கொண்டு என் புத்தகங்களை பார்த்து கொண்டு பழைய நினைவுகளை அசைவு போட்டு கொண்டு இருக்கிறேன்..
0 comments:
Post a Comment